வெள்ளி, 10 நவம்பர், 2017

கற்றலை ஊக்குவிப்போமென ஊற்று செயற்படுகிறது.

மூத்த வலைப்பதிவர்களான ரமணி ஐயா, தனபாலன் ஐயா ஆகியோரது மதியுரைப்படி ரூபன் தலைமையில் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் இயங்குகின்றது. வலைவழியே போட்டிகளை நடாத்தி பரிசில் வழங்குவதோடு நின்று விடாமல் வலைப்பதிவர்களுக்கான பயிற்சிகள், படைப்பாக்கப் பயிற்சிகள், மற்றும் கற்றலை ஊக்குவித்தல் எனப் பல பணிகளை ஆற்றுகின்றது. உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண, இப்பணிகளை உலகெங்கும் விரிவுபடுத்தும் நோக்கில் செயற்படுகிறது.

இந்த வகையில் 06-11-2017 திங்கள் அன்று இலங்கை, திருகோணமலை, ஈச்சிலம்பற்று ஸ்ரீசண்பகா மகாவித்தியாலயத்தில் தரம் 05 இல் நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை மதிப்பளித்திருக்கிறது. இந்நிகழ்வை ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையினரும் திருகோணமலை கலாசார திணைக்களத்தினரும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் ஒருங்கிணைந்து நடாத்தியிருந்தது.

இந்நிகழ்வில் ஈச்சிலம்பற்றுக் கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட18 பாடசாலைகளில் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும் 100 புள்ளி எடுத்த மாணவர்களுக்கும் பணப் பரிசும் கற்றல் உபகரணமும் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தரம் 05 மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவித்துப் பாராட்டுதலும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளர்ந்து வரும் இளம் அறிவிப்பாளர் விருதும் பலருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்விற்குச் சிறப்பு அதிதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பல கல்வி அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு தாமரை வானொலி மற்றும் சக்தி தொலைக்காட்சி ஆகியன ஊடக அனுசரணை வழங்கி ஒத்துழைத்தனர். நிகழ்வில் சிக்கிய ஒளிப்படங்களைக் கீழே பார்க்கலாம்.


தகவல்: யாழ்பாவாணன், செயலாளர், ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்  

2 கருத்துகள்: